கருத்துப் பஞ்சமா?

கொஞ்ச காலம் முன்பு, இசைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்து, சிங்கப்பூர் வந்தபின் எப்படிக் கொஞ்சம் பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன் என்றும் அதன் பின்பு இசை பற்றிப் பல கருத்துகள் உருவாகி இருப்பது பற்றியும் எழுதியிருந்தேன். அது பற்றிப் படிக்க இங்கே சொடுக்குங்கள். அது போலவே, தீவிர வாசிப்பு இதுவரை ஆரம்பமாகவில்லை. இப்போதுதான் ஓரளவுக்கு வாசிக்கலாம் என்று பிள்ளையார் சுழி போட்டிருக்கிறேன். அதற்குள்ளாகவே வாசிப்பிலும் சில சுவாரசியமான அனுபவங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. அப்படியான ஒரு முக்கியமான அனுபவம் - குறிப்பிட்ட சில தகவல்களைத் திரும்பத் திரும்பப் பல நூல்களில் காண முடிகிறது. மொத்த உலகத்திலும் இவ்வளவுதான் கருத்துக்களா என்று தோன்றும் அளவுக்குச் சில தகவல்களும் கருத்துக்களும் திரும்பத் திரும்பக் கண்ணில் படுகின்றன. அப்படியாகக் கடந்த சில வாரங்களில் அடிக்கடிக் கேள்விப் பட்ட ஒரு சிலவற்றைக் கீழே கொடுக்கிறேன்:

1. ஜெயகாந்தன் பற்றி நான் தெரிந்து வைத்திருப்பது அதிகமில்லை. ஆனால் அவர் பற்றி அறிந்து கொள்ள முயன்று தேடித் பார்த்த போதெல்லாம் ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிற சில தகவல்களே திரும்பத் திரும்ப வந்து விழுந்தன. சென்ற வாரம் அவர் பற்றிய ஆவணப் படம் பார்த்த போது கூட அது போலச் சில தகவல்கள் கிடைத்தன. அது பற்றிய இடுகையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். இவ்வளவு பெரிய சமுத்திர இணையத்தில் இப்படி நடப்பது மகா ஆச்சரியமாக இருக்கிறது.

2. அது போலவே எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பற்றித் தேடிய போதும் ஏற்கனவே வேறு மூலங்களின் மூலமாகக் கேள்விப் பட்டிருந்த சில தகவல்கள் மற்றும் அவருடைய கருத்துக்கள் மீண்டும் மீண்டும் வந்தன.

3. பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று விழைந்து, சோம்பல் காரணமாக சில காணொளிகள் கண்டேன். முதலில் பார்த்தது, தமிழருவி மணியன் அவர்கள் காமராசர் பற்றி நிகழ்த்திய உரை ஒன்று. அடுத்ததாக நெல்லை கண்ணன் அவர்கள் காமராசர் பற்றி நிகழ்த்திய உரை ஒன்று. இரண்டிலுமே சில பொதுத் தகவல்கள். இதன் பொருள் பெரியவருடைய வாழ்வில் வேறு பெரிய நிகழ்வுகளே இல்லை என்பதில்லை. அப்படியொரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவருடைய மகானின் வாழ்வில் சுவாரசியமான கதைகளுக்கும் அனுபவங்களுக்குமா பஞ்சமிருக்க முடியும்? பின் ஏன் அப்படி?

4. இதுதான் இதுவரை பார்த்த அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போன்றது. கடந்த சில வாரங்களாக இரு முற்றிலும் வேறுபட்ட நிறமும் குணமும் மொழியும் கொண்ட நூல்களைப் படித்து வருகிறேன். ஒன்று, தமிழில் பாரதியார் கட்டுரைகள் என்ற நூல். இன்னொன்று, ஆங்கிலத்தில் நெப்போலியன் ஹில் என்பாருடைய THINK AND GROW RICH. பாரதியார் பார் அறிந்த ஒரு பக்கா இலக்கியவாதி. ஆன்மீகமும் இலக்கியமும் அரசியலும் பேசும் தேசபக்தர். நெப்போலியன் ஹில் சுய முன்னேற்றம் மற்றும் நிர்வாகவியல் பேசும் அமெரிக்க முதலாளித்துவவாதி. முதல் நாள் இரயிலில் போகும் போது நெப்போலியன் முகமது நபி பற்றிப் பேசும் ஒரு நிகழ்வைப் படித்து விட்டு வீடு வந்து சேர்ந்து, தூங்கி எழுந்து, மறுநாள் காலை வீட்டில் பாரதியார் கட்டுரைகளை எடுத்துப் பார்த்தால், அதே நிகழ்வை அதே சொற்களில் ஆனால் வேறொரு மொழியில் எழுதியிருக்கிறார் நம்மவர். ஆடிப் போனேன். இருவரும் ஒரு காலத்தில் வாழ்ந்தவர் என்பதைத் தவிர அவர்களுக்கிடையில் ஒற்றுமை என்று வேறெதுவும் சொல்வதற்கில்லை. அப்படியிருக்க இதெப்படி சாத்தியமாயிற்று? நெப்போலியன் ஹில்லின் நூலைப் படித்துத்தான் பாரதியார் இதை எழுதியிருக்க வேண்டும் என்று யாராவது வம்பை இழுத்து வைக்காதீர்கள். 

சொல்வதற்கிருக்கும் சரக்கு மொத்த உலகத்திலும் இவ்வளவுதான் என்பதை விட, ஏதோவொரு வகையில் என் வாசிப்பில் ஒரு தினுசு (PATTERN) உருவாகி விட்டதோ (அப்படி இருக்க விடவே கூடாது என்று வலிந்து முயன்றும்) என்ற அச்சம் வருகிறது. பழியை வேறு யார் மீதாவது போட வேண்டும் என்று வேலைக்கு வந்த பின் படித்த பாடத்தின் படிப் பார்த்தால், அதிக பட்சம் அதை இணையம் என்ற தொழில்நுட்பத்தின் மீது போடலாம். "மெனக்கெட்டு நூல்களை எடுத்து வாசித்திருந்தால் இப்படியெல்லாம் ஆகியிராது தம்பி; நோகாமல் நொங்கு தின்ன முயன்றதால் வந்த வினை; எல்லாம் பழைய நொங்காக இருக்கிறது!" என்று யாரோ சொல்வதும் கேட்கிறது. அதுவும் கூட நான்காவது மேட்டருக்குப் பொருந்தாதே!

இது பற்றி நீங்க என்ன சொல்றிங்க?

கருத்துகள்

  1. நியாயமான ஆதங்கம்
    " அதைப் படித்துத்தான் நம்ம ஆள் இதை எழுதியிருக்க வேண்டும் என்று யாராவது வம்பை இழுத்து வைக்காதீர்கள்." அந்த நம்மால் யாரென்பதை சொல்ல முடியுமா? பகிரங்கமாக கூறமுடியாது விட்டால் தனிபட்ட முறையில் எனக்கு அனுப்ப முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது, "நெப்போலியன் ஹில்லின் நூலைப் படித்துத்தான் பாரதியார் காப்பியடித்தார் என்று யாரும் சொல்லி விடாதீர்கள்!" என்று சொன்னேன். :)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி