வம்ச அரசியல் மோகம் (TRYST WITH THE DYNASTY)

முன் குறிப்பு: ஈழப் பிரச்சனையையும் அதில் காங்கிரசின் நிலைப்பாட்டையும் பற்றிய கோபங்களை மட்டும் சிறிது நேரம் ஒதுக்கி வைத்து விட்டு இதைப் படியுங்கள். அந்த கோபங்கள் அனைத்தும் எனக்கும் அப்படியே உண்டு. ஆனாலும், நாமெல்லாம் இப்போதைக்கு இந்த நாட்டின் ஓர் அங்கமாக இருப்பதால், அதற்கு அப்பாற்பட்டும் இந்திய அரசியல் பற்றிப் பேச வேண்டியுள்ளது என்பதும் காலத்தின் கட்டாயம்.

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் பதினைந்தாம் நாள் விடியலுக்கு முந்தைய இரவில் பேரறிஞர் (இந்த அடைமொழி அண்ணாவுக்கு மட்டுமே சொந்தம் எனப் பிடிவாதமாய் இருக்கும் தம்பி அல்ல நான்!) நேரு ஆற்றிய உரையின் பெயர் "TRYST WITH THE DESTINY". அதாவது, கிட்டத் தட்ட "விதியோடு உல்லாசம் / விளையாட்டு" என்று பொருள் படும் என வைத்துக் கொள்ளலாம். அதையே சிறிது சுளுக்கினால் TRYST WITH DYNASTY என்றாகிறது. அதன் பொருளோ "வம்ச அரசியலோடு உல்லாசம் / விளையாட்டு" என்றாகிறது. அதையே இன்னும் கொஞ்சம் சுளுக்கி "வம்ச அரசியல் மோகம்" என்றாக்கி விடுவோம் தமிழில். மோகம்தானே உல்லாசங்களின் மூலம்.

இதுவரை இந்த நாட்டை ஆண்டோரிலேயே அதிகம் தகுதி படைத்தவரும் இருந்த பிரதமர்களிலேயே பலவீனமான ஒருவருமானவரிடமிருந்து (பலரில் ஒருவர் என்றுதான் சொல்வேன்; அவரே எல்லோரையும் விடப் பலவீனமானவர் என்று எண்ண வில்லை; இருபது-முப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் மரியாதை கூட இல்லாமல் ஏற்கனவே சிலர் இந்த நாட்டை ஆண்டுவிட்டுச் சென்று விட்டார்கள்!) காங்கிரஸ் கட்சியின் இளவரசர் எப்போது அதிகாரத்தைக் கைப்பற்றப் போகிறார் என்பது அரச வம்சத்தோரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், நல்ல செய்தி என்னவென்றால், இந்தக் கைப்பற்றல் கிட்டத் தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின் ஒருவித நிலைப்புத் தன்மையைக் கொண்டு வரும். இப்போதைக்கு அது அவ்வளவு சிறப்பாக இல்லை. ஐ.மு.கூ-1 இல் சில முதுகெலும்பற்ற கோமாளிகள்கூட அவரை மதிக்காமல் அநியாயம் பண்ணினார்கள். ஐ.மு.கூ-2 இல் பரவாயில்லை. ஆனால் இன்னும் சரிப்படுத்த நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எல்லோருக்கும் மேலே உட்கார்ந்திருப்பவர் மக்களின் ஆதரவு அற்றவராக இருக்கும்போது அவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியாது. துரதிர்ஷ்ட வசமாக, பின் வாசல் வழியாக வந்ததால் முனைவர் சிங்கிடம் அது இல்லை. சில இடுகைகளுக்கு முன் பேசியது போல, அது அவருடைய பிரச்சனை அல்ல. நம்முடையது. அளவுக்கு மீறிய நாகரீகம் படைத்த ஒருவரை மதிக்கவும் ஆதரிக்கவும் முடியாதது நம்முடைய பிரச்சனைதான். அவருடையதல்ல.

பதவி கை மாறும்போது, நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு மக்கள் தலைவன் தலைமைப் பொறுப்பில் அமர்வது போலாகும். இந்த தேசம் கண்ட பிரதமர்களிலேயே பலவீனமான பிரதமர் என்று அத்வானியால் அழைக்க முடியாது. புத்திசாலித்தனமாக வித்தியாச வித்தியாசமாக யோசித்து விமர்சிப்பதற்கு ஏதாவது புதிய காரணங்கள் கண்டு பிடிக்க வேண்டியிருக்கும். பாதி இந்தியர் என்றோ பாதி இத்தாலியர் என்றோ சொல்ல வேண்டியிருக்கும். ஆட்சிக் கட்டிலைப் பிடிக்கும் வரை மண மேடையில் அமரும் எண்ணம் இளவரசருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. முடிசூட்டு விழாவுக்கு முன்பே திருமணம் செய்ய நேர்ந்தால், அது விமர்சனங்களுக்கு விருந்து வைத்து அழைப்பு விடுத்தது போலாகிவிடும். அத்வானிகளுக்கும் மோதிகளுக்கும் அவருடைய அடையாளம் பற்றிக் கேள்வி எழுப்ப மேலும் ஒரு வாய்ப்புக் கொடுத்தது போலாகி விடும். கொலம்பியப் பெண் குட்டி பற்றிக் கேள்விப் படும் செய்திகளெல்லாம் பொய்யாக இருக்க வேண்டுமென்று மனமார ஆசைப்படுகிறேன். நம் நீண்ட வரலாற்றில், அடுத்த தலைமுறையின் அத்வானிகளும் மோதிகளும் வெளிநாட்டுத் தொடர்புகள் பற்றிய பிரச்சனையைப் பேசுவதில் நேரத்தை வீணடிக்கக் கூடாது. அடுத்த வெளிநாட்டு காந்தியைப் பற்றிய ஆராய்ச்சியில் தன் திறமை முழுமையையும் வீணடிக்கும் இன்னொரு சுப்ரமணியசாமி நமக்கு வேண்டாம்.

எப்படியிருந்தாலும், மாற்றம் நடக்கும் போது, பிரதமர் மீண்டும் இந்தியாவின் தலை சிறந்த அதிகாரம் படைத்தவராக ஆவார். அனைத்து அமைச்சர்களும் அவர் பேச்சைக் கேட்பார்கள். இல்லாவிட்டால், அடுத்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, அடுத்த ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் வண்டியிலேயே தத்தம் சொந்த மாநிலத்துக்கு மூட்டை கட்டி அனுப்பி விடுவார்கள் என்று அவர்களுக்கும் தெரியும். அரசியலமைப்பின்படி சர்வ அதிகாரமும் படைத்த பிரதமரானவர் ஒவ்வொரு கொள்கை முடிவுக்கும் அவருக்கும் மேலே இருக்கும் ஒருவரிடம் போய் அனுமதி வாங்க
வேண்டியிராது.

அது சரி, இளவரசர் அரசனானால் மகிழ்வேனா? இல்லை. கண்டிப்பாக இல்லை! ஏன்? வாஜ்பாய் - சோனியா மோதலின் போது, கட்சி என்கிற முறையில் பா.ஜ.க.வை விட காங்கிரஸ் பரவாயில்லை என்று நினைக்கிற ஆளாக இருந்தாலும், சோனியாவைவிட வாஜ்பாய் பரவாயில்லை என்று நினைத்தேன். அத்வானி - சோனியா மோதலாக இருந்திருந்தாலும் கூட, அத்வானியைத் தான் ஆதரித்திருப்பேன். கொள்கை ரீதியான மோதல்களில் பா.ஜ.க.வை விட காங்கிரஸ் பக்கமே அதிகம் சாய்வேன். ஆனால், ஆளுமைகளுக்கு இடையேயான போட்டியில், ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக ஒருவரைத் தகுதியானவர் என்பதை ஏனோ என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நம் அரசியலின் மிகப் பெரிய கோமாளித் தனம் அதுதான். சர்வ அதிகாரம் படைத்த பின்பெயரோடு, தகுதி பெறுவதற்குரிய திறமைகளும் கொண்டிருந்தால், கண்டிப்பாக நீங்கள் வரலாம். ஆனால், சின்ன வயதிலிருந்து மக்களுக்காக உழைத்த ஒருவரை விட, மக்களால் - மக்களுக்காக - மக்களாலேயே அமைக்கப் பட்ட அரசாங்கத்தில் அப்படி உழைத்த ஒருவருக்குப் பிறந்த ஒருவருக்குப் பிறந்த ஒருவருக்குப் பிறந்த ஒருவரை முன்னிறுத்துவது எந்த வகையிலும் நியாயப் படுத்தக் கூடியதாக இல்லை.

நூறு கோடி மக்கட்தொகை கொண்ட ஒரு நாட்டில் நாற்பது வருடங்களுக்கு முன்பு சரியான துணையைத் தேர்ந்தெடுக்கும் திறமை பெற்றிருந்த ஒரே காரணத்துக்காக ஒருவர் சகல வல்லமை கொண்ட ஒரு தலைவராக முடியும் என்பது மிக மிகக் கொடுமை. வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்கும் நாட்கள் தொட்டு, கையில் கட்சிக் கொடியையும் மனதில் பெரும் கனவுகளையும் ஏந்திக் கொண்டு சாலைகளிலும் வீதிகளிலும் தங்கள் வாழ்க்கையைச் செலவிட்டவர்களுக்கு அது பெரும் வலியாக இருக்கும். மன்மோகன் சிங் போன்றவர்கள் மக்கள் அனைவராலும் மதிக்கப் படுகிற - சர்வ அதிகாரமும் படைத்த தலைவராக இருப்பதையே முழு நிறைவோடு காண விரும்புவேன். ஆனால், அது நடைமுறைக்கு எட்டாத தொலைவில் உள்ள ஆசை. அவரே இன்றைக்குப் பெற்றிருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரமும் இந்திய அரசியலின் அதிகார மையமாக இருக்கும் குடும்பத்தின் நம்பிக்கையைப் பெற்றதால்தான் முடிந்தது.

எனவே, நடைமுறை சாத்தியங்களைக் கணக்கில் கொண்டு பார்த்தால், நம் மக்கள் தம் தலைவர்களின் குடும்பத்தைக் கண்டு அல்லாமல் சாதனைகளைக் கொண்டு அவர்களை ஆதரிக்கும் நாள் வரும்வரை அல்லது தமக்குப் பிடித்த தலைவர்களைத் தாமே தேர்ந்தெடுக்கும் விதத்தில் நம் அமைப்பு மாறும் வரை (கூடிய விரைவில் அதிபர் முறை அமைப்பைப் பற்றியும் எழுத வேண்டும் என்றோர் ஆசை), கீழ் வரும் காரணங்களுக்காக காங்கிரசின் இளவரசன் அரசனாவதில் எனக்கொன்றும் பிரச்சனையில்லை.

1. அந்த இருக்கைக்குரிய அதிகார வீச்சு என்னவென்று நிலை நிறுத்தப் படும். அதுவே உலக அரங்கில் நம் நாட்டை உறுதியாக்கும். அத்வானி சொல்வது போல, அது கண்ணியம் சம்பந்தப் பட்ட விஷயம் என்று சொல்ல மாட்டேன். சரியாகவும் 'கண்ணியமாகவும்' சொல்ல வேண்டுமென்றால், அது நிலைப்புத் தன்மை சார்ந்த விஷயம்.

2. அவருடைய வருகை தகுதியின்படியானது இல்லையென்றாலும், அரசியிலின் உள்ளோட்டங்களை அறிந்து கொள்வதில் தேவையான அளவு நேரம் செலவழித்து இருக்கிறார். எனவே, உள்ளே தள்ளி விடப்படும் வேளையில் அவருடைய தந்தை அளவுக்குக் கத்துக் குட்டியாக இருக்க மாட்டார். தந்தை செய்த அதே தவறுகளை இவரும் செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அவருடைய தந்தையை விடப் பரவாயில்லாமல் பண்ணுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

3. இது வம்ச அரசியலுக்கு வரிந்து கட்டிப் பேசுவது போலத் தோன்றினாலும், ஒருவருடைய குடும்பம் பொது வாழ்க்கையில் இத்தனை தலைமுறைகளாக இருந்திருக்கிறது என்றால், அவருக்குக் கண்டிப்பாகப் பொது வாழ்வு பற்றிய நல்ல அறிவும் பிடியும் இருக்கும் என்று நம்புகிறேன். பின்பெயரை மட்டுமே வைத்து ஒருவரைப் பெரிதாக்குவதை எந்த வகையிலும் ஆதரிக்க வில்லை. ஆனால், நடக்கப் போவதை யாரும் தடுக்க முடியாது என்பதை அறிந்து அதைப் பற்றிய நேர்மறைகளை மட்டும் பேசக் காரணங்கள் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இந்த விஷயத்தில் 'ஆம்' அல்லது 'இல்லை' என்கிற இரு வார்த்தைகளில் என் முடிவைச் சொல்லி விட முடியாது. அவர் பிரதமராவதை நான் ஆதரிக்கிறேனா என்பதை ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால், அந்த வாக்கியம் இப்படிப் போகும் - "இந்த நாட்டின் மக்கள் அடிமைகளைப் போல அவர்களுடைய தலைவனை திரும்பத் திரும்ப ஒரே குடும்பத்தில் இருந்து இழுத்துக் கொண்டு வராமல் நூறு கோடி மக்களில் இருந்து ஒருவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; ஆனாலும், அந்த முதிர்ச்சி நமக்கு வரும்வரை, யாரோ ஒரு பிராந்திய அரசியல் அயோக்கியன் அல்லது அயோக்கியை வந்து நம்மை ஆள்வதற்குப் பதிலாக ராகுல் காந்தி போன்ற ஒருவர் நம் பிரதமராவது எனக்கு பரவாயில்லை என்றுதான் படுகிறது!". எவ்வளவு நீளமான "ஒரே வாக்கியம்"!? :)

கருத்துகள்

  1. தங்கள் கருத்தில் எனக்கு கருத்து மாறுபாடு இருந்தாலும், தங்கள் கருத்துக்களைச் சொன்ன விதம், கருத்தாக்கம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. அதற்காகவே உங்கள் அனுமானம் பலித்து இந்தியாவின் முதல் பெரிய வம்சாவளிக் குடும்பத்தின் இன்னாள் இளவரசர் வெகுவிரைவில் அரியணை ஏறி நாட்டிற்கு அவராலான சேவை(??) செய்யட்டும், பிறகு நமது மதிப்பீடுகளைத் தள்ளிப் போடுவோமே?

    பதிலளிநீக்கு
  2. நன்றி சோலையூரான் அவர்களே. இவர்கள் பண்ணும் சேட்டைகளைப் பார்த்தால் அது நடக்காது போலத் தெரிகிறது. அல்லது, நடக்கக் கொஞ்சம் கூடுதல் காலம் ஆகலாம். :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி